நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கர், ஜாமீன் நிபந்தனைகளை மீறியதை கண்டறிந்தால் ஜாமீனை ரத்து செய்து போலீசார் அவரை கைது செய்யலாம் என்றும் அதன் பிறகு போலீசாரின் இந்த நடவடிக்கை சரியா இல்லையா என்பதை ஆய்வு செய்யலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கடந்த ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி மோசடி வழக்குகளில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். சென்னை ஆதம்பாக்கம் மற்றும் சைதாப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் பதிவு செய்யப்பட்ட மோசடி வழக்குகளில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார்.
யூடியூபர் சவுக்கு சங்கர்
இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட சவுக்கு சங்கருக்கு மருத்துவ காரணங்களுக்காக சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்க உத்தரவிட்டது. ஜாமீனில் வெளிவந்த சவுக்கு சங்கர் தொடர்ச்சியாக தனது யூடியூப் பக்கத்தில் வீடியோவை பதிவிட்டு வந்தார்.
இதனால், மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் பெற்ற சவுக்கு சங்கர் தொடர்ந்து யூடியூப்பில் வீடியோக்களை வெளியிட்டு வருவதாகவும், சாட்சிகளை மிரட்டுவதாகவும் கூறிய போலீசார் அவரது இடைக்கால ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்க கூடாது
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 23 ஆம் தேதி கூடுதல் நிபந்தனைகளை விதித்தனர். அதாவது, தனக்கு எதிராக உள்ள வழக்குகள் குறித்து நேரடியாகவோ, மறைமுகமாகவோ, சமூக ஊடகங்களில் எந்த வித கருத்தையும் தெரிவிக்க கூடாது என்று உத்தரவிட்டது.
மேலும் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை முதல்வர் தலைமயில் குழு அமைத்து சவுக்கு சங்கரின் உடல் நிலை பற்றி அறிக்கை தாக்கல் செய்யவும் கோர்ட் உத்தரவிட்டது. இதன்படி, சவுக்கு சங்கரின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கையும் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.
சவுக்கு சங்கர் உடல் நலனில் எந்த பிரச்சினையும் இல்லை
இந்நிலையில், சவுக்கு சங்கர் தொடர்பான வழக்கு நீதிபதிகள் பி. வேல்முருகன், எம். ஜோதிராமன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சவுக்கு சங்கர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி. ராகவாச்சாரி, சவுக்கு சங்கர் எந்த நிபந்தனைகளையும் மீறவில்லை. அவருடைய உடல்நிலையைக் கருத்தில் கொண்டே நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருக்கிறது.
சவுக்கு சங்கரை தனிமைச் சிறையில் அடைத்து துன்புறுத்துவதால் ஜாமீனை ரத்து செய்யக்கூடாது என்று வாதிட்டார். காவல்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர், சவுக்கு சங்கர் உடல் நலனில் எந்த பிரச்சினையும் இல்லை. அவர் உள்நோயாளியாக சிகிச்சை பெற வேண்டிய அவசியம் இல்லை என்று மருத்துவ அறிக்கை மூலம் தெரிகிறது.
வீடியோக்களை பார்ப்பதுதான் எங்கள் வேலையா?
சாட்சிகளை கலைக்கும் விதமாக வீடியோக்களை பதிவேற்றுகிறார். விசாரணை அதிகாரியை மிரட்டும் தொனியில் பேசுகிறார். அவரது வீடியோவை பார்த்தாலே தெரியும்“ என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் அவரது வீடியோக்களை பார்ப்பதுதான் எங்கள் வேலையா? எங்களுக்கு தினமும் வழக்கு தொடர்பான கோப்புகளே அதிகம் படிக்க வேண்டியுள்ளதால் செய்தித்தாள் கூட படிக்க முடியவில்லை.
சவுக்கு சங்கர் நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை மீறியதாக போலீஸ் கருதினால் ஜாமீனை ரத்து செய்து கைது செய்யலாம். அவரது கைது நடவடிக்கை சரியா? தவறா? என்பதை நீதிமன்றம் பிறகு விசாரிக்கும் என்று கூறியதோடு, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
